அவன் பெயரில் எழுதப்பட்ட கணக்கு (சிறுகதை)
எல்லோரும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
அவன் மெதுவாக போர்வையை விலக்கிவிட்டு கட்டிலிலிருந்து கீழிறங்கினான். காலடியோசைக்கூட
கேட்காதபடி மெல்ல நகர்ந்து சத்தமில்லாமல் அறைக்கதவைத் திறந்து மூடினான். வெளியே வந்து
பக்கத்து அறைக் கதவையும் அவ்வாறே சத்தமேதுமில்லாமல் திறந்து உள்ளே நுழைந்து மூடினான்.
அறை முழுக்க இருள்! இருளில் சுவரைப் பற்றி
மெல்ல நகர்ந்து ஸ்விட்சைத் தேடிக் கண்டுப்பிடித்து ஸ்விட்ச்சை ஆன் செய்தான். ஒளி அறையை
நிறைக்க, அவன் பீரோவுக்கு எதிராக நகர்ந்தான்.
பீரோ பூட்டப்பட்டிருந்தது.
அப்பா சாவியை எங்கு வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அறை முழுக்க தேடத் துவங்கினான்.
இறுதியாகக் கண்டுப்பிடித்துவிட்டான். சாவி, அந்த அறையின் அலமாறியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த
துணிகளுக்குக் கீழாக இருந்தது. சாவியைக் கையிலெடுத்துக்கொண்டு பீரோவை நோக்கி நகர்ந்தான்.
ஓசையெழாமல் சாவியை பீரோவுக்குள் நுழைத்து அத்தனை சிரத்தையுடன் சிறு சத்தம் கூட எழாதபடிக்கு
மெல்ல திறந்தான்.
பீரோ முழுக்க
துணிகள் நிறைந்திருந்தன. அப்பாவின் பட்டு வேட்டிதான் பளிச்சென்று கண்களுக்கு முதலில்
புலப்பட்டது. அம்மாவின் பட்டுப்புடவைகள், தங்கையின் பட்டு பாவாடைகள், அவனது பேண்ட்டு
சட்டைகள் எல்லாம் சீராக மடித்து அடுக்கப் பட்டிருந்தன. அவற்றிலிருந்து எழுந்த சுகந்தம்
அவனுக்குள் ஒரு விதக் கிறக்கத்தைக் கொடுத்தது. கண்கள் பீரோவைத் துழாவின. உள் அறைக்குள்தான்
பணமும் நகைகளும் இருக்குமென்று அவனுக்குத் தெரியும். ஆனால் உள்ளறையின் சாவி?
எப்படியும்
ஏதாவது துணிக்குக் கீழாகதான் உள்ளறையின் சாவியை அப்பா வைத்திருப்பார் என்று யோசித்தபடியே
ஒவ்வொரு துணிகளையும் எடுத்து பார்த்தான். கடைசியில் அது அப்பாவின் பட்டு வேட்டிக்குக்
கீழாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுக்கொண்டான். அதைக் கைகளில் எடுத்து உள்ளறையைத் திறந்தான்.
உள்ளறையில் மூன்று நகைப்பெட்டிகள் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தான்.
முதலிரண்டு பெட்டிகளில் கொஞ்சம் தங்க நகைகளும் தங்க நாணயங்கள் சிலவும் இருந்தன. மூன்றாவதாகப்
பார்த்த பெட்டியில், வெள்ளி நகைகளுடன் சேர்த்து கொஞ்சம் பணமும் மடித்து வைக்கப்பட்டிருந்தது.
அவற்றை கையிலெடுத்து பிரித்து பார்த்தான். இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் நான்கும் ஒரு
ஐநூறு ரூபாய் தாளும் இருந்தன. அவனுக்குத் தேவை, எட்டாயிரம் ரூபாய் மட்டுந்தான். நல்ல
வேலையாக எதிர்பார்த்த பணம் இருக்கிறது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு ஐநூறு ரூபாய்
தாளை மட்டும் வைத்துவிட்டு இரண்டாயிரம் தாள்களைச் சுருட்டி தனது பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டு
பீரோவின் உள்ளறையைப் பூட்டிவிட்டு சாவியை அப்பாவின் பட்டு வேட்டிக்குக் கீழாகவே வைத்து
பீரோவைப் பூட்டிவிட்டு அந்தச் சாவியையும் இருந்த இடத்திலேயே வைத்தான். அறைக் கதவைத்
திறந்து வெளியேறி எல்லோரும் படுத்திருக்கும் படுக்கையறைக் கதவைத் திறந்து உள் நுழைந்து
தனது கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டான்.
அப்படி இப்படியென
எப்படி புரண்டும்கூட அவனுக்குத் தூக்கமே வரவில்லை. விட்டத்தைப் பார்த்தபடி யோசனையில்
ஆழ்ந்தான். உடனடியாக பணம் வேண்டுமென்று அவள் கேட்டிருந்தாள். அப்பாவின் மருத்துவ செலவுக்குத்
தேவை என்றாள். ஒரு வாரத்திலேயே பணத்தைத் திருப்பிக்கொடுத்து விடுகிறேன் என்றும் கூறினாள்.
நிச்சயம் தவறாமல் தந்துவிடுவாள். எப்போதும் கேட்காதவள் இப்போது கேட்டிருக்கிறாள். அதனால்
அவனால் மறுக்க முடியவில்லை. அப்பாவிடம் ஏதாவது பொய் சொல்லிப் பணம் கேட்கலாம் என்றாலும்
என்ன சொல்லிக் கேட்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஏற்கனவே ஏதேதோ காரணங்கள் சொல்லி
தேவைக்கு அதிகமாகவே நிறைய பணம் பெற்றிருந்தான். அதனால் தயக்கமாக இருந்தது. எப்படியும்
அவள் சொன்னபடி, ஒரு வாரத்துக்குள் கொடுத்துவிடுவாள் என்று தோன்றியது. இப்போதைக்கு வீட்டிலிருந்து
எடுத்து கொடுத்துவிடலாம். பிறகு என்னவானாலும் சமாளிப்போம் என்று அவனுக்குத் தோன்ற எடுத்துவிட்டான்.
அப்பாவுக்கு
இந்த ஒரு வாரத்துக்குள் ஏதாவது பணத்தேவை இருக்குமா? அப்படிப் பணத்தேவை ஏதேனும் இருந்து
பீரோவைத் திறந்து உள்ளே வைத்திருந்த பணத்தைக் காணவில்லை என்பதை அவர் தெரிந்துக்கொண்டால்
என்ன ஆகும்? ஒரு வேளை, இந்த ஒரு வாரத்தில் அவருக்குப் பணத்தேவை இல்லாதப்பட்சத்தில்,
அவள் பணத்தைத் திருப்பிக் கொடுத்த பிறகுத் திரும்ப வைத்துவிட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லைதானே!
ஆனால்…
நிறைய கேள்விகள்
சூழ கண்களை மூடினான்.
எந்தக் கணத்தில்
தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. காலையில் கண் விழித்து பார்த்தபோது மணி எட்டரை
ஆகியிருந்தது. ஒன்பது மணியளவில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகாக வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு
அவளிடம் சொல்லியிருந்தான். அவசர அவசரமாக கிளம்பிப் பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்து
நிறுத்தத்துக்கு அருகாக சென்றான். அவள் ஏற்கனவே வந்து காத்திருந்தாள். அவனைப் பார்த்ததும்
கையசைத்தாள். அவன் அவளுக்கு அருகாகச் சென்று பாக்கெட்டிலிருந்த பணத்தையெடுத்து கொடுத்தான்.
‘எப்பவும் எதுவும்
நீ எங்கிட்ட கேட்டதே இல்ல… மொதமுறை கேட்ருக்க… அதான் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் இந்தப்
பணத்தைப் புரட்டிருக்கேன்…’
‘நிச்சயம் ஒரு
வாரத்துக்குள்ள தந்துடுறேன்டா… அக்கா இன்னும் ரெண்டு நாள்ல ஊர்லருந்து வருந்துருவா…
அம்மாவோட நகையெல்லாம் அவ கையில்ல தான் இருக்கு… வரும்போது கொண்டு வருவா… அந்த நகையை
அடமானம் வெச்சித்தான் எல்லாக் கடனையும் சரிக்கட்டனும்…’
‘இன்னும் எவ்ளோ
கடன் இருக்கு?’
‘அது நிறையவே
இருக்கு… வாங்குன கடனைவிட வட்டிதான் அதிகமாகிட்டே இருக்கு… எல்லாத்தையும் சீக்கிரமே
சரிக்கட்டனும்… அக்கா வெச்சிருக்க அம்மா நகைய நம்பிதான் இருக்கோம்…’
‘ஏண்டி வட்டிக்கெல்லாம்
வாங்கிட்டு…’
‘வேற என்னடா
பண்றத்து? மாசம் தவறாம அந்தாளுக்கு ஆஸ்பிட்டல்ல தண்டம் வெக்க வேண்டியிருக்கு…’
அவள் கொஞ்சம்
இடைவெளிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
‘மனசுல இருக்குறத்த
உண்மையா சொல்லவா? அந்தாளு சீக்கிரம் செத்துட்டாலே நல்லாருக்கும்னு தோனுது… குடிச்சி
குடிச்சே குடும்பத்தையும் ஒடம்பையும் அழிச்சிட்டு இப்போ படுத்தபடுக்கையா இருக்கார்…
எல்லாம் அம்மாவுக்காகத்தான் செய்ய வேண்டியிருக்கு… இல்லண்ணா… நானேகூட அந்தாள எப்பவோ
சாக அடிச்சிட்டிருப்பேன்… இப்பக்கூட சில சமயம் தோணும் தெரியுமா? யாருக்கும் தெரியாம
சோத்துல வெஷம் வெச்சிடலாம்னு… அவரும் நிம்மதியா போகலாம்… எங்களுக்கும் கொஞ்சம் நிம்மதி
கெடைக்கும்…’
சொல்லிவிட்டு
தலைத்தாழ்த்திக்கொண்டாள். அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர்களுக்குள் மௌனம்
நிலவியது.
‘சரிடா… நான்
கெளம்புறேன்… ஆஸ்பிடல்க்குப் போய் பணத்தைக் கட்டனும்… அடுத்த வாரம் பணத்தைத் தந்துடறேன்…
நீ ஒன்னும் கவலப்படாத…’
‘ம்…’
*
ஒரு வாரமாகியும் அவள் அவனுக்குப் பணத்தைத்
திருப்பிக் கொடுக்கவில்லை. அவன் அலைப்பேசியில் அவளைத் தொடர்புகொள்ள முயற்சித்தான்.
அவளது எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. நேரடியாக அவளது வீட்டுப்பக்கம் சென்று
பார்க்கலாமென்று சென்றான். வீடு பூட்டியிருந்தது. அவள் குறிப்பிட்டிருந்த மருத்துவமனையிலும்
அவளோ அவள் அப்பாவோ அம்மாவோ என யாருமில்லை. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் சூழல்
என்னவோ தெரியவில்லை என்று நினைத்துக்கொண்டான். என்றாலும் என்ன ஏதென்று முன்கூட்டியே
தகவல் தெரிவித்திருக்கலாம் என்று அவள் மீது கோபம் வந்தது.
இடையில் ஒரு
நாள், அவனது அப்பா ஏதோவொரு பணத்தேவையின் பொருட்டு பீரோவைத் திறக்க வந்தார். அன்று அவன்
அந்த அறையில்தான் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தான். அப்பா, அந்த அறைக்குள் நுழைந்ததுமே
அவனுக்குள் ‘திக்…திக்…’ என்றிருந்தது. வியர்த்துக்கொட்டியது. என்ன நடக்கப் போகிறது
என்று தெரியாத அச்சம் பிடித்து இம்சித்தது. அவர் அலமாறிக்கு அருகாக வந்து துணிக்குக்
கீழாக இருந்த சாவியை எடுத்தார். இவன் அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி புத்தகத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தான். அப்பா, பீரோவை நெருங்கி அதைத் திறக்க, அவனது இதயம் படபடத்தது.
உள்ளறையையும் திறந்தார். இவனுக்கு வியர்வைத்துளிகள் பெருகின. அப்பா, நகைப்பெட்டிகள்
ஒவ்வொன்றையும் திறந்து பார்த்தார். இவன் அவரைப் பார்த்தும் பார்க்காத மாதிரியே இருந்தான்.
அவர் ஏதாவது
கேட்பாரோ என்ற பயம் இவனுக்குள் மிகுந்திருந்தது. அவரது முகத்தைக் கூர்ந்து நோக்கினான்.
எந்தச் சலனமும் இல்லை. பெட்டிகளை மூடி உள்ளறைக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு அறையைவிட்டு
நகர்ந்தார். இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பா, பணம் வைத்திருந்ததை மறந்துவிட்டாரா
என்று யோசித்தான். அதேசமயம் பணம் சார்ந்த கணக்குகளைத் தவறாமல் டைரியில் குறித்து வைக்கும்
அப்பா, இந்த எட்டாயிரத்தை எப்படி மறந்திருப்பார் என்றும் தோன்றியது. ஒரு வேளை காணாமல்போன
பணத்தைக் குறித்து அம்மாவிடம் விசாரிக்க செல்கிறாரோ என்ற எண்ணம் எழ, அவன் பக்கத்து
அறைக்கு அருகாகச் சென்றான். பக்கத்து அறையில், அவனது அம்மா, அப்பா, தங்கை மூவரும் தொலைக்காட்சி
பார்த்தபடி இருந்தார்கள். இவன் வெளியில் நின்றபடியே எதாவது பேசிக்கொள்கிறார்களா என்று
கவனமாக கேட்க முயற்சித்துக்கொண்டிருந்தான். சில நொடிகள் அங்கேயே நின்றிருந்தான்.
அவன் நினைத்தபடியே,
‘பீரோல எட்டாயிரத்து ஐநூறு ரூபா வெச்ச மாதிரி இருந்துச்சி… இப்போ பார்த்தா வெறும் ஐநூறு
ரூபாய்தான் இருக்கு… நீ எதாச்சும் எடுத்தியா?’ என்று அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவனுக்குப் பகீரென்றிருந்தது. ‘அப்பா மறக்கவில்லை! அவருக்கு ஞாபகம் இருக்கிறது. அடுத்து
நிச்சயம் தன்னிடம் வந்துதான் கேட்பார் என்று அவனுக்குத் தோன்றியது.
வேறு வழியில்லை.
அப்படி கேட்டால் உண்மையைப் போட்டு உடைத்துவிட வேண்டியதுதான் என்று மனதுக்குள் நினைத்தபடியே
அறைக்குத் திரும்பிவிட்டான். அறைக்கு வந்து எதையெதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தான்.
அன்று முழுக்க, அப்பாவைப் பார்ப்பதையும் அவரை எதிர்கொள்வதையும் தவிர்த்தான்.
அன்று இரவு
படித்துக்கொண்டிருந்த அறையிலேயே படுத்தும் தூங்கிவிட்டான். தூங்கும் முன்பே முடிவு
செய்துவிட்டான். காலையில் நேரமாக எழுந்திருக்க கூடாது. அப்பா வேலைக்குக் கிளம்பி சென்ற
பிறகே எழுந்துக்கொள்ள வேண்டுமென்று. அதேப்போல மறுநாள் காலை அவர் வேலைக்குப் போன பிறகே,
மிகத் தாமதமாக எழுந்தான்.
ஒரு வாரம் முழுக்க,
தாமதமாக வீட்டுக்கு வர ஆரம்பித்தான். தாமதமாக தூங்கி எழுந்தான். எல்லா வகையிலும், அவரது
பார்வையிலிருந்து விலகி அவரைத் தவிர்த்தே வந்தான். அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
பணத்தையெடுத்தவன் அவன்தான் என்பது அப்பாவுக்குத் தெரியும் என்று. ஆனால் அவர் அவனிடம்
எதுவும் கேட்டுக்கொள்ளவேயில்லை. அவனும் அவனாகப் போய் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.
அவள் சீக்கிரம் பணத்தைக் கொடுத்துவிட்டால் தேவலாம் என்பது போல் இருந்தது அவனுக்கு.
பணம் கைக்குக் கிடைத்துவிட்டால் அதை எடுத்த மாதிரியே வைத்துவிடலாம்.
*
சில நாட்களுக்குப்
பிறகு அவள் தானாகவே அவனை அலைப்பேசியில் அழைத்து தாமதத்துக்கான காரணத்தைச் சொன்னாள்.
அவளது அக்கா வரவில்லையாம். அக்காவின் கணவர் நகையை எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்றும்
மீறி போனால் திரும்பி எப்போதும் வரவேண்டாமென்றும் சொல்லி மிரட்டி வைத்திருக்கிறாராம்.
அதனால் அவளால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. பணம் கட்டாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு
மாறியிருக்கிறார்கள். அங்கேயே தங்கும்படி நிலைமை மோசம் ஆகிவிட்டது. நாட்கள் எடுத்துக்கொண்டாலும்கூட,
அப்பா ஏதோ கொஞ்சம் தேறியிருக்கிறார் என்றாள் அவனிடம்.
பணமில்லாமல்
எப்படி அவனை எதிர்கொள்வது என்று அவளுக்குத் தெரியவில்லை. எப்படியாவது பணத்தைப் புரட்டிவிடலாம்
என்றும் பணத்துடன் நேரில் சந்திக்கலாம் என்றும் நினைந்திருக்கிறாள். ஆனாலும் இத்தனை
நாட்கள் ஆகியும் புரட்ட முடியவில்லை. இன்னும் சில நாட்கள் அவகாசம் தரச்சொல்லி கேட்டாள்.
இவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ‘ம்… பரவாயில்லை. பொறுமையாவே கொடுடி!’ என்று
மட்டும் சொல்லியிருந்தான். அவனது அப்பா, காணாமல் போன பணத்தைப் பற்றி இவனிடம் கேட்டுக்கொள்ளாதது
ஏதோ ஒரு வகையில் அவனை அப்படி சொல்ல வைத்திருந்தது.
அதைத் தொடர்ந்த
நாட்களில், இவனுக்கு இருந்த குழப்பமெல்லாம், அப்பா ஏன் அந்தப் பணம் குறித்து தன்னிடம்
ஒரு வார்த்தையும் கேட்கவில்லை என்பதைக் குறித்தே இருந்தது.
நீண்ட யோசனைகளுக்குப்
பிறகு, அவன் அவரது கணக்கு வழக்கு டைரியை எடுத்து புரட்டிப்பார்த்தான். அதில் அவர்,
அவனது பெயரைக் குறிப்பிட்டு எட்டாயிரம் ரூபாய் என்று கணக்கு எழுதியிருந்தார். அதைப்
பார்த்தவனுக்குப் பகீரென்று இருந்தது. சட்டென ஒரு குற்றவுணர்வு அவன் தலைக்கேறியது.
*
Comments
Post a Comment